Sunday, July 6, 2008

14 : ஒழுக்கமுடைமை

01 : ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கம் ஒருவனுக்கு உயர் சிறப்பைத் தருவதால் அது உயிரைக் காட்டிலும் மேலானதாகும். உயிர் சிறந்ததாயினும் ஒழுக்கம் அதை விட உயர்ந்தது. உயிரை விட்டு விட எண்ணலாம்.ஆனால் ஒழுக்கத்தைத் தவறியும் விடுதல் கூடாது. வாழும் மனிதனுக்கு உயிர் ஒழுக்கம்.

02 : பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணிக் காக்க வேண்டும். எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கத்தை விட உயிருக்குத் துணையானதும் மேலானதும் வேறொன்றுமில்லை.

03 : ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கமே ஒருவருக்குக் குடிச்சிறப்பாகும். அவ்வொழுக்கம் தவறுதல் மிகவும் இழிந்த பிறப்பாய் விடும். உயர் குடியில் பிறந்தாலும் ஒழுக்கம் தவறினால் அது இழிவாய் நிற்கும்.

04 : மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

வேதத்தைக் கற்றவன் அதை மறந்தாலும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் பிறப்பொழுக்கம் தவறினால் அவன் சிறப்பே கெட்டு விடும். கற்றது மறக்காது; தவறினால் ஒழுக்கம் மீண்டும் பெற முடியாது.

05 : அழுக்கா(று) உடையான்கண் ஆக்கம்போன்(று) இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு

பொறாமை உடையவன் இடத்தே வளரும் செல்வம் இல்லை. அது போல் ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்வில்லை.

06 : ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்(கு) அறிந்து.

நெஞ்சுரம் மிக்கொர் ஒரு போதும் ஒழுக்கம் தவறார். காரணம் ஒழுக்கம் தவறுதலினால் வரும் குற்றத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் மேலோங்கி நிற்பதனால். ஒழுக்கமே அவர்க்கு மனவலிமை.

07 : ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

ஒழுக்கத்தால் மேலான புகழைப் பெறுவர். ஒழுக்கம் தவறுதலால் தீராத பழியை அடைவர். பழி, பாவத்தை விடக் கொடியது. செய்யக்கூடாத செயலைச் செய்வதால் பெறுவது பாவம்; செய்யாத செயலுக்கு ஆளாவது பழி.

08 : நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நன்மைக்கு வழி காட்டுவது நல்லொழுக்கம். தீராத துன்பத்தைத் தருவது தீயொழுக்கம்.

09 : ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

ஒழுக்கமுடையவர்கள் மறந்தும் கூட நாத்தவறி தீய சொற்களைக் கூற மாட்டர்; எண்ணவும் மாட்டர்; செய்யவும் மாட்டர்.

10 : உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

உலக நடைமுறை ஒழுக்கத்தைக் கல்லாதவர்கள் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் அறிவற்றவராகவே கருதப்படுவர். நன்மையைச் செய்வதும்;தீமையை மறப்பதும், உண்மையைச் சொல்வதும்; பொய்ம்மையைத் தவிர்ப்பதும், ஆக்கத்தை நினைப்பதும்; அழிவை மறப்பதும் உலக நடையாகும்.

செல்வி ஷங்கர் : 06.07.2008