Saturday, September 4, 2010

29 : கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு ....................................01

பிறர்தன்னை இகழாது வாழ வேண்டும் என்று எண்ணுபவன் மற்றவர் பொருளை வஞ்சித்துக் கொள்ளும் மனம் இல்லாதவனாய் இருக்க வேண்டும். வஞ்சனை என்றும் இழிவையே தரும்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் .......................................02

அடுத்தவன் பொருளை அவன் அறியாமல் கவர்ந்து கொள்வோம் என மனத்தால் நினைத்தாலும் அது தீதே. நினைவு செயலுக்கு இடமாகும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவறிந்(து)
ஆவது போலக் கெடும் ...............................................03

திருடிப் பெறுகின்ற செல்வம், பெருகுவது போல் தோன்றி, இருப்பதையும் அழித்துச் சென்று விடும். அழிவிற்கு வழி கோலுதல் ஆக்கமன்று.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் ....................................................04

திருடிப் பொருள் பெற விரும்பும் பேராசை முடிவில் தீர்க்க முடியாத பெரும் துன்பத்தைத் தந்து விடும். துயரம் தரும் களவை விரும்பவே கூடாது.

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதி
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் ...............................05

பிறன் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் வஞ்ச மனத்தாரிடம் அன்பும் அருளும் நிறைந்த செயலைக் காண முடியாது. வஞ்சிப்பாரிடம் வளமான மனமேது ?

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர் ......................................................06

மாற்றான் பொருளைத் திருடி வாழும் ஆசை மனமுடையாரிடம் நல்வழியில் செல்லும்
நல்ல மனத்தைக் காண முடியாது.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல் .........................................07

வாழும் முறை அறிந்து வாழ்பவனிடத்தே பிறன்பொருளை வஞ்சித்து வாழும் இருள் மனம் நிற்காது. இருளும் ஒளியும் ஒரு நேரத்தே தோன்றாது. ஒன்றிருப்பின் மற்றொன்று நிலைக்காது.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு .....................................08

வாழும் முறையறிந்து வாழ்பவன் நெஞ்சத்தே அறம் நிலைப்பதைப் போல் களவறிந்தவன் நெஞ்சில் வஞ்சம் குடியிருக்கும்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர் ...............................................09

களவைத் தவிர பிறவற்றைத் தேர்ந்து அறியாதவர்கள் அறமில்லா செயல்களைச் செய்து அழிவர். புகழின்றி வாழ்வர்.

கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு ...........................................10

திருடிப் பிழைப்பவர்க்கு வாழ்வின் பயன் நிலைக்காது. நல்வழி நடப்பார்க்கு வானுலகம் கிடைக்காமல் போகாது.

செல்வி ஷங்கர்

Wednesday, June 23, 2010

28 :கூடாவொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்................................................... 01
வஞ்சகத் தன்மை உடையவனின் பொய்யான தவ ஒழுக்கம் இவ்வுலகத்தாரின் நகைப்புக்கு இடமாகும். உள்ளம் அறிய உண்மை வெளிப்படும் செயற்பாடே தவம். தலை சிறந்த ஒழுக்கம் !

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின்..................................................... 02
தன் நெஞ்சம் அறிய குற்றம் புரிந்தவனின் வானுயர்ந்த புகழாலும் பெருமையாலும் எவ்விதப் பயனுமில்லை !

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.........................03
மனவலிமை இல்லாதவனின் தவக்கோலம், பசு புலியின் தோல் போர்த்திக் கொண்டு பயிர் மேய்ந்த கதையாகும். ஏமாற்றுதல் என்பது வேதனைக்குரியதே !

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.......................................04
தவக்கோலம் பூண்டு தவறானவற்றைச் செய்தல் வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிக்க வலை வீசுதல் போலாகும். வேட்டையாடுதல் வேள்வியாகாது.

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் எற்றற்றென்றன்
ஏதம் பலவும் தரும்..........................................................05
ஆசைகளைத் துறந்தோம் என்று கூறிப் பொய்யான தவ ஒழுக்கம் மேற்கொள்வார் செயல் நாம் என்ன செய்தோம் என்று எண்ணி எண்ணி இரங்கும் படியான நிலையைத் தந்து விடும். மனக் கலக்கம் மாண்புறு செயலுக்கு வித்தாகாது.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணவர் இல்.......................................06
உள்ளத்தால் துறவாது துறவி போல் கோலம் கொண்டு ஏமாற்றி வாழ்பவரை விடக் கொடியவர் இவ்வுலகில் யாருமிலர். பொய்யும் போலித் தோற்றமும் ஒழுக்கம் ஆகாது.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து...............................................07
வெளித் தோற்றத்தில் குன்றி மணி போல் தோற்றம் உடையாரும் மனத்தை மறைத்துச் செயல்படுதல் மூக்கில் கரியுடைய தோற்றத்துடன் செயல்படுவது போல ஆகும்.

மனத்த(து) மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.....................................08
மனத்தில் குற்றத்தை மறைத்து மாண்புடையார் போல் செயல்படுவார் செயல், நீரில் மூழ்கி தன்னை மறைத்து, தன் செயல்களைச் செய்வது போல் ஆகும்.

கணைகொடி(து) யாழ்க்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல் .........................................09
தோற்றத்தில் அன்றிச் செயலாலும் மாறுபடும் மாந்தரும் உலகில் உள்ளனர். அம்பு தோற்றத்தால் நேரானது. ஆனால் செயலால் துன்பம் தரும். யாழ் வளைவானது. ஆனால் இன்னிசை தரும்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின்...............................................10
இந்த உலகம் பழிக்கத் தக்க செயல்களை நாமும் ஒழித்து விட்டால் புறத்தோற்றங்கள் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. முடியை வளர்த்தலும் மொட்டை யடித்தலும் எதற்கு ?

செல்வி ஷங்கர்