Saturday, January 29, 2011

30 : வாய்மை

01 : வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால் எவ்வுயிர்க்கும் தீங்கு தராத சொற்களைப் பேசுவதே ஆகும்.

02 : பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

குற்றமற்ற நன்மை தரும் என்றால் பொய் கூட வாய்மையே ஆகும்.

03 : தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

உள்ளம் அறிய பொய் கூறாதே ! கூறினால் உன்னெஞ்சே உன்னைச் சுட்டெரித்து விடும்.

04 : உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

மனமறிய பொய் கூறாது வாழ்பவன் உலகத்தவரின் உள்ளங்களில் எல்லாம் வீற்றிருப்பான்.

05 : மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ் செய்வாரின் தலை.

மனமறிய உண்மை பேசி வாழ்பவன் தானமும் தவமும் செய்யும் மக்களைக் காட்டிலும் சிறந்தவன். தனக்காகச் செய்கின்ற தானமும் பிறர்க்காகச் செய்கின்ற தவமும் கூட உண்மை பேசுபவன் முன் பொய்த்துப் போகும். உலகில் உண்மையே உயர்ந்த அறம்.

06 : பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

பொய் கூறாதிருத்தலை விடச் சிறந்த புகழ் வேறு இல்லை. வருந்திப் பாடுபடாமலே எல்லாப் புகழையும் தருவது உண்மை ஒன்றே !

07 : பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொய் சொல்லாமல் நடக்கும் புனிதச் செயல் ஒன்றை நீ மேற்கொண்டாலே போதும். பிற புண்ணியச் செயல்கள் எல்லாம் நீ செய்யாமலே உனக்கு வந்து சேரும்.

08 : புறந்தூய்மை நீரான மையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

உடல் தூய்மை நீ நாள் தோறும் நீராடுவதால் அமையும். அது போல் உன் உள்ளத் தூய்மை நீ நாள் தோறும் உண்மை பேசுவதால் அமையும்.

09 : எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு.

புற இருளைப் போக்குகின்ற விளக்குகள் எல்லாம் சான்றோர்க்கு விளக்காக மாட்டா ! மன இருளைப் போக்குகின்ற பொய்யாமை ஆகிய விளக்கே ஒளி தரும் விளக்காகும்.

10 : யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

உண்மையாகவே இந்த உலகத்தில் நான் ஆராய்ந்து அறிந்த வற்றுள் உண்மையை விடச் சிறந்த நல்லறம் வேறொன்றுமில்லை.

செல்வி ஷங்கர்

Saturday, September 4, 2010

29 : கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு ....................................01

பிறர்தன்னை இகழாது வாழ வேண்டும் என்று எண்ணுபவன் மற்றவர் பொருளை வஞ்சித்துக் கொள்ளும் மனம் இல்லாதவனாய் இருக்க வேண்டும். வஞ்சனை என்றும் இழிவையே தரும்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் .......................................02

அடுத்தவன் பொருளை அவன் அறியாமல் கவர்ந்து கொள்வோம் என மனத்தால் நினைத்தாலும் அது தீதே. நினைவு செயலுக்கு இடமாகும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவறிந்(து)
ஆவது போலக் கெடும் ...............................................03

திருடிப் பெறுகின்ற செல்வம், பெருகுவது போல் தோன்றி, இருப்பதையும் அழித்துச் சென்று விடும். அழிவிற்கு வழி கோலுதல் ஆக்கமன்று.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் ....................................................04

திருடிப் பொருள் பெற விரும்பும் பேராசை முடிவில் தீர்க்க முடியாத பெரும் துன்பத்தைத் தந்து விடும். துயரம் தரும் களவை விரும்பவே கூடாது.

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதி
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் ...............................05

பிறன் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் வஞ்ச மனத்தாரிடம் அன்பும் அருளும் நிறைந்த செயலைக் காண முடியாது. வஞ்சிப்பாரிடம் வளமான மனமேது ?

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர் ......................................................06

மாற்றான் பொருளைத் திருடி வாழும் ஆசை மனமுடையாரிடம் நல்வழியில் செல்லும்
நல்ல மனத்தைக் காண முடியாது.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல் .........................................07

வாழும் முறை அறிந்து வாழ்பவனிடத்தே பிறன்பொருளை வஞ்சித்து வாழும் இருள் மனம் நிற்காது. இருளும் ஒளியும் ஒரு நேரத்தே தோன்றாது. ஒன்றிருப்பின் மற்றொன்று நிலைக்காது.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு .....................................08

வாழும் முறையறிந்து வாழ்பவன் நெஞ்சத்தே அறம் நிலைப்பதைப் போல் களவறிந்தவன் நெஞ்சில் வஞ்சம் குடியிருக்கும்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர் ...............................................09

களவைத் தவிர பிறவற்றைத் தேர்ந்து அறியாதவர்கள் அறமில்லா செயல்களைச் செய்து அழிவர். புகழின்றி வாழ்வர்.

கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு ...........................................10

திருடிப் பிழைப்பவர்க்கு வாழ்வின் பயன் நிலைக்காது. நல்வழி நடப்பார்க்கு வானுலகம் கிடைக்காமல் போகாது.

செல்வி ஷங்கர்

Wednesday, June 23, 2010

28 :கூடாவொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்................................................... 01
வஞ்சகத் தன்மை உடையவனின் பொய்யான தவ ஒழுக்கம் இவ்வுலகத்தாரின் நகைப்புக்கு இடமாகும். உள்ளம் அறிய உண்மை வெளிப்படும் செயற்பாடே தவம். தலை சிறந்த ஒழுக்கம் !

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின்..................................................... 02
தன் நெஞ்சம் அறிய குற்றம் புரிந்தவனின் வானுயர்ந்த புகழாலும் பெருமையாலும் எவ்விதப் பயனுமில்லை !

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.........................03
மனவலிமை இல்லாதவனின் தவக்கோலம், பசு புலியின் தோல் போர்த்திக் கொண்டு பயிர் மேய்ந்த கதையாகும். ஏமாற்றுதல் என்பது வேதனைக்குரியதே !

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.......................................04
தவக்கோலம் பூண்டு தவறானவற்றைச் செய்தல் வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிக்க வலை வீசுதல் போலாகும். வேட்டையாடுதல் வேள்வியாகாது.

பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் எற்றற்றென்றன்
ஏதம் பலவும் தரும்..........................................................05
ஆசைகளைத் துறந்தோம் என்று கூறிப் பொய்யான தவ ஒழுக்கம் மேற்கொள்வார் செயல் நாம் என்ன செய்தோம் என்று எண்ணி எண்ணி இரங்கும் படியான நிலையைத் தந்து விடும். மனக் கலக்கம் மாண்புறு செயலுக்கு வித்தாகாது.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணவர் இல்.......................................06
உள்ளத்தால் துறவாது துறவி போல் கோலம் கொண்டு ஏமாற்றி வாழ்பவரை விடக் கொடியவர் இவ்வுலகில் யாருமிலர். பொய்யும் போலித் தோற்றமும் ஒழுக்கம் ஆகாது.

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து...............................................07
வெளித் தோற்றத்தில் குன்றி மணி போல் தோற்றம் உடையாரும் மனத்தை மறைத்துச் செயல்படுதல் மூக்கில் கரியுடைய தோற்றத்துடன் செயல்படுவது போல ஆகும்.

மனத்த(து) மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.....................................08
மனத்தில் குற்றத்தை மறைத்து மாண்புடையார் போல் செயல்படுவார் செயல், நீரில் மூழ்கி தன்னை மறைத்து, தன் செயல்களைச் செய்வது போல் ஆகும்.

கணைகொடி(து) யாழ்க்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல் .........................................09
தோற்றத்தில் அன்றிச் செயலாலும் மாறுபடும் மாந்தரும் உலகில் உள்ளனர். அம்பு தோற்றத்தால் நேரானது. ஆனால் செயலால் துன்பம் தரும். யாழ் வளைவானது. ஆனால் இன்னிசை தரும்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின்...............................................10
இந்த உலகம் பழிக்கத் தக்க செயல்களை நாமும் ஒழித்து விட்டால் புறத்தோற்றங்கள் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. முடியை வளர்த்தலும் மொட்டை யடித்தலும் எதற்கு ?

செல்வி ஷங்கர்








Monday, October 5, 2009

27 :தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு ...........................................01

தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதுமே தவம் எனப்படும்.

தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது .................................02

நல்லவராக இருப்பதும் நல்லொழுக்கம் மேற்கொள்வதும் தவமுடையார்க்கு அழகாகும். அஃதில்லாதவர் அவ்வாறு நடிப்பது தவறே ஆகும்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்........................................03

தவம் செய்வார்க்கு தானம் செய்ய வேண்டியே மற்றவர்கள் தவம் மேற்கொள்வதில்லை.

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் ..............................04

துன்பம் செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் அன்பு செய்தாரைப் போற்றுதலும் தவத்தால் வரும் பண்பு

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.........................................05

நினைத்ததை நினைத்தவாறு பெறவே தவச் செயல் எல்லோராலும் மேற்கொள்ளப் படுகிறது. இடை விடா முயற்சியே தவம்

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு ....................06

தவம் மேற்கொள்பவர்களே தம் கடமையைச் செய்பவர்கள். மற்றவர்களெல்லாம் ஆசையால் பயனற்ற செயல்களைச் செய்பவர்களே ஆவர்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு...........................07

பொன்னைச் சுடச்சுட தரம் உயர்ந்து ஒளி வீசுவது போல் தவமேற்கொள்வார்
தன் துன்பம் நீங்கி அறிவொளி வீசுவர்.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மண்ணுயிர் எல்லாம் தொழும்.....................08

தன்னலப் பற்றற்றவனை தன்னுயிரும் பிறர்க்கே என்று எண்ணு பவனை எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு......................09

தவம் மேம்பட்ட ஒழுக்கம் உடையாரை எமனும்நெருங்க முடியாது. தன்னுயிரும் பிறர்க்கே என்ற விடாமுயற்சி உடையானிடம் உயிர் கொல்லும் எமனுக்கு ஒரு வேலையும் இல்லை.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்..............................10

உலகில் வறியவர் பலராக இருப்பதற்குக் காரணம் தவ உணர்வுடையார் சிலராகவும் அவ்வுணர்வற்றார் பலராகவும் இருப்பதுவே . விடா முயற்சிஉடைய செயல்களே வெற்றியைத் தேடித் தரும்.

செல்வி ஷங்கர்

Saturday, May 16, 2009

26 : புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -----------------------------01


தன்னுடல் வளர்ப்பதற்கு பிற உயிர்களைக் கொன்று உண்பவன் இடத்தில் அன்பும் அருளும் எப்படி இருக்க முடியும் ? ஒரு நாளும் அருள் பிறக்க வழி இல்லை. உயிர்க்கொலை கொடிது.

பொருளாட்சி போற்றாதர்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.----------------------02


பொருளைப் போற்றிப் பாதுகாக்கும் திறன் அதன் பயன் அறியார்க்கு இல்லை. ஊன் தின்பவனுக்கு உயிரைக் காக்கும் அருட்தன்மை இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.---------------------------03

படைக்கருவி கொண்டவன் நெஞ்சம் உயிர்க்கொலை ஒன்றையே நோக்கி அன்பினை மறத்தல் போல், உடல்சுவை ஒன்றையே கருதி ஊனுண்பவன் அருளை மறக்கின்றான்.

அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.-----------------------04


அன்புடமை என்பது உயிர்க்கொலை செய்யாதிருத்தல். உயிர்களைக் கொல்லுதல் அருளுடைமை அன்று. அதுவும் அவ்வூனை உண்பது நற்செயல் அன்று.


உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. ----------------------05


ஊனுண்ணாதிருப்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன். அந்நிலை மறந்து ஊனுண்பவனை நரகம் கூட விழுங்காது. நரகத்திலும் கொடியது ஊனுண்ணுதல்.


தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.-------------06


தின்பதற்காக உயிர்க்கொலை செய்பவன் இல்லை என்றால் விற்பதற்காக உயிர்க்கொலை செய்வாரும் இல்லை. உண்பவன் இருப்பதால் தான் விற்பவனும் கொல்கின்றான்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.---------------------------07

பிறிதொரு உயிரின் உடற்புண் என்றுணர்ந்து புலால் உண்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.-----------------------------08

தெளிந்த அறிவுடையார் உயிரை இழந்த உடலின் ஊனை உண்ண ஒருநாளும் விரும்பார். அறிவுடைமை என்பது உயிர்க்கொலை செய்யாமை.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று..------------------------09

அவிப்பொருள் அளித்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விடச் சிறந்தது ஒரு உயிரை அழித்து அதன் உடல் உண்ணாதிருத்தல்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.---------------------------------10

உயிர்க்கொலை செய்யாதவனை, ஊனுணவை உண்ணாதவனை உலகத்து உயிர்கள் எல்லாம் நெஞ்சாரப் போற்றி வணங்கும்.

செல்வி ஷங்கர்
-----------------------

















Sunday, May 3, 2009

25 : அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள ! ...................................... 01
செல்வத்துள் சிறந்த செல்வம் அருட்செல்வம். மற்ற பொருட்செல்வம் எல்லாம் இழிவானவர்களிடம் கூட இருக்கலாம்.

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை ! ................................... 02
எப்படிப்பார்த்தலும் சரி - அருளே வாழ்வுக்குத் துணையாகும். எனவே நல்ல வழிகளை நாடி அருட்செயல் புரிதல் வேண்டும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் ! ...................................... 03
நெஞ்சம் கனியும் அருளுடையார்க்கு துன்பம் நிறைந்த இருள் உலகம் எப்போதுமில்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ! ...............................04
பிற உயிர்களை அன்போடு காத்து அருள் செய்வார்க்கு தன்னுயிர் அஞ்சும் படியான துயர் எப்போதும் இல்லை.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி ! .....................................05
அன்போடும் அறிவோடும் வாழ்வார்க்குத் துன்பமில்லை என்பதற்கு இந்த வளமான பூமியே சான்றாகும். காற்றும் மழையும் இயற்கை வளமும் நாம் கேட்டு வருவதில்லையே !

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார் ! ..........................06
அன்பின்றி அருள் மறந்து அல்லவை செய்பவர்கள் வாழ்வின் பயனிழந்தவர்கள் ஆவர்.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு! ............................ 07
பொருளில்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல் அருளில்லார்க்கு வாழ்வில் புக்ழ் இன்பம் இல்லாது போகும்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது ! ...................................08
செல்வ வளம் இல்லாதவர் ஒரு காலத்து வளம் பெற்று வாழலாம். ஆனால் அருளில்லாதவர் ஒரு நாளும் நலம் பெற்று வாழ இயலாது.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் . ................................09
அன்பும் அறிவும் இல்லாதவன் நல்வாழ்வு வாழ்தல் என்பது அறிவுத் தெளிவற்றவன் மெய்ப்பொருள் ஆய்தல் போன்றது.

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. .........................10
நாம் நம்மை விட மெலியாரிடம் செல்லும் போது நாம் நம்மில் வலியார் முன் சென்றால் என்ன ஆவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இரக்கம் என்பது நெஞ்சில் வேண்டும்.

செல்விஷங்கர்






Friday, February 27, 2009

24 : புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு...................................... 01

இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தலும் அதன் மூலம் புகழ் பெறும்படியாக வாழ்தலுமே வாழ்க்கைப் பயன். அதைத்தவிர வேறு எதுவும் துணையன்று. ==================================================
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்...................................... 02

இவ்வுலகில் புகழ்ந்து பேசப்படும் பெருமை எல்லாம், வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுபவனின் புகழேயாகும். ==================================================
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்...................................... 03

நிலையற்ற இவ்வுலகில், அழியாது நிலைத்து நிற்பது புகழொன்றேயாகும். ==================================================
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு...................................... 04


இவ்வுலகில் நிலைத்த புகழ்ச்செயல் செய்தாரையே, மேலுலகம் போற்றும். தேவர்களை அன்று! தெய்வத்தின் மேலானது 'வறியவர்க்கு, ஒன்று ஈந்து' பெறும் புகழே.
==================================================
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது...................................... 05

வளர்ச்சியும் அழிவும் உலகத்து இயல்பு. அதில் புகழ்பட வாழும் வித்தை, ஈந்து வாழும் இன்பம் உடையவர்க்கே கைவரப் பெறும்.

==================================================
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...................................... 06

ஒரு செயலைச்செய்து புகழ்பெற முடியும் என்றால், அச்செயலால், நாம் இச்சமுதாயத்திற்கு அறிமுகமாக வேண்டும். இல்லையெனில் அச்செயலைச் செய்யாமல் இருப்பதே நன்று.
==================================================
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்...................................... 07

புகழ்பெறும் படும்படியான செயல்களைச் செய்து வாழ இயலாதவர்கள், தம் இயலாமைக்காகத் தன்னைத்தானே நொந்து கொள்ள வேண்டுமே தவிர, தன்னை இகழ்வாரை நோவதினால் ஒரு பயனும் இல்லை. ==================================================
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்...................................... 08

தனக்குப்பின், புகழ் எஞ்சி நிற்குமாறு வாழ அறியாதவர் வாழ்க்கை, பலரும் பழிக்கும் படியான வாழ்வாகிவிடும். ==================================================
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்...................................... 09

புகழ்பெறாத மக்களைச் சுமந்த நிலம், குற்றமற்ற நல்வளங்கள் எல்லாம் இழந்து நிற்கும் - மாசுற்ற மக்களால், மாசற்ற மண்ணும் கெடும்.

==================================================

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்...................................... 10

பழிநீங்குமாறு வாழ்பவர்களே, உண்மையில் உயிர் வாழ்பவர்கள். புகழ் நீங்குமாறு வாழ்பவர்கள் உயிருடன் நடமாடினாலும் உயிரற்றவர்களே!==================================================
செல்வி ஷங்கர்
==================================================