Sunday, February 24, 2008

1 : கடவுள் வாழ்த்து

1. எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளன போல் உயிர்களெல்லாம் இறைவனை முதலாகக் கொண்டுள்ளன. முதன்மைப் பண்பு தலைமைப் பண்பல்லவா? அது தரணிக்கே ஆதாரமானது!!

2. ஆற்றல் மிக்க ஆண்டவனின் திருவடிகளைத் தொழுவதே கற்றதின் பயன். இறையை வணங்காத அறிவால் பயனில்லை - பண்பில்லை.

3. மனமலரில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை மனத்தில் நினந்தவர் நிலவுலகில் நீடு வாழ்வர். நிலையற்ற உலகில் நிலையானதைப் பற்றுதல் தான் நெஞ்சுக்கு நிம்மதி.

4. விருப்பு வெறுப்பற்ற இறையடியைப் பணிந்தோர் தம்மைத் துன்பங்களிலிருந்து தூய்மைப் படுத்திக் கொள்வர். அவர்க்கு எப்பொழுதும் துன்பமில்லை - இன்பமே கூடும்.

5. செயல் மயக்கங்கள் நம்மைச் சேராதிருக்க வேண்டுமென்றால் பொருள் பொதிந்த இறையடியை நாம் நினைத்தல் வேண்டும். நன்மை தீமை எது எனறு நாம் அறியாதிருப்பதே நம் அறிவு மயக்கம். அம்மயக்கம் தீர வேண்டு மென்றால் ஆண்டவன் திருவடியை மனத்தால் நினைந்து, சொல்லால் போற்றி, கரங்களால் வழி பட வேண்டும்.

6.பொறிகளைப் புலன்வழிச் செல்லாது அடக்கிய புனிதன் இறைவன். அவனை வணங்கினால், நாம் மெய் வழிச் செல்ல நம் பொய் வழி அகலும். அவ்வழி நின்றால் நாம் நிலைத்து வாழலாம்.

7. நம் மனக்கவலை தீர வேண்டும் என்றால் தனக்குவமை இல்லாதான் தாள்களை நாம் போற்ற வேண்டும். போற்றுதல் புகழ் புரிந்தார் செயல் ஆகும். அவ்வாறு நாம் போற்றித் தொழுதால் நாம் போற்றப்படுவோம்.

8. அறக் கடலாகிய இறையடி சேர்ந்தாரே பிறவிக்கடலை நீந்திக் கரை சேர்வர். மற்றவரெல்லாம் மனமயங்கி மயக்கம் கொள்வர்.

9. எண்குணத்தான் தாள்களைப் பணியா விட்டால் நம் அறிவு குறிக்கோள் இல்லாத குப்பைமேடே ! வாழ்வில் வழி தெரியாமல் தவிப்பவர்க்கு வாழ வழி காட்டுவது வேத வடிவான இறையடிகளே !

10. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் இறை சிந்தனை இல்லாதார் இவ்வுலக வாழ்வைக் கடந்து நிற்பது முடியாத ஒன்று. நம்பிக்கை தான் வாழ்வு. அந்த வாழ்வைப் பெற வழி காட்டுபவன் வானிறைவனே ! அவனைத் தொழுவது ஒன்றே நம்வழி!!

வாழப் பிறந்த மனிதன் வாழ்க்கையைக் காண்பது வழிபாட்டிலே !

தொடரும்.........

8 comments:

')) said...

சோதனை மறுமொழி

')) said...

எளிமை..இனிமை..

')) said...

எண்ணச் சிறகு நன்கே பறக்கிறது. வாழ்த்துகள்

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா, மலர்

')) said...

நல்லது, ஒரு யோசனை:
Labels-இல் 'திருக்குறள்' என்றும் சேர்க்கலாம்.
அதன் மூலம், 'திருக்குறள்' என்று தேடி வருபவர்கள் இந்தப் பகுதியை அடைய உதவும்.

')) said...

நல்ல பரிந்துரை ஜீவா - நன்றி - செயல் படுத்தி விட்டேன்

')) said...

அம்மா. குறட்பாக்களையும் கொடுத்தால் அவற்றையும் படித்துக் கற்க வாய்ப்பு ஏற்படுமே. எளிமையான இந்த விளக்கங்களுடன் மூலமும் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் பரிந்துரைக்கும் நன்றி குமரன். சிந்திக்கிறேன்