Thursday, February 28, 2008

3 : நீத்தார் பெருமை !

1. இவ்வுலகத்து ஆசைகளைத் துறந்த துறவியரின் பெருமை அவர்தம் ஒழுக்க நெறிகளே ஆகும். அவை வேதங்கள் விதித்த செயல்களால் சிறப்பன. வாழ்வே வேதமானால் வழி தடுமாற வேண்டாமே !

2. இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எப்படிக் கணக்கிட முடியாதோ அது போன்றே துறவியரின் பெருமையையும் அளவிட்டுக் கூற முடியாது. அனைத்தையும் கடந்தார் கடவுளல்லவா !

3. உலக வாழ்வின் நன்மை தீமை உணர்ந்து துறவறம் பூண்டாரின் பெருமையே உலகில் சிறந்ததாகும். துன்பங்களைத் துறத்தல் இன்பம் தானே!

4. தன் மன மனவலிமையால் ஐம்பொறிகளையும் அடக்கி ஆள்பவன் இவ்வுலக வாழ்வில் அமைதி காண்பது போல் வீடு பேற்றுக்கும் வித்திடுவான். விதை முளைத்து வளர்தல் போல் இன்பம் பெருகும்.

5. ஐம்புலன்களின் ஆசையை அடக்கியவன் ஆற்றல் இறைவனைக் கூட ஏன் என்று கேட்கும் வலிமையைத் தந்து விடும். ஒழுக்க நெறி பின்பற்றி வாழ்தலால் சிறக்கும். சிறந்தார் என்றும் உயர்ந்தோரே!

6. பிறர் செய்வதற்கரிய செயல்களைத் தம்மாற்றலால் செய்து முடிப்போர் பெரியோர். அவ்வாறு செய்ய இயலாதார் சிறியோர். பெருமையும் சிறுமையும் அவரவர் செயல்களால் வெளிப்படும்.

7. இந்த உலகம் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனின் கையில் தான் உள்ளது. சுவைப்பதும் பார்ப்பதும் உணர்வதும் கேட்பதும் நுகர்வதும் நல்வழியில் நடை பெற வேண்டும். பாதை தவறினால் ஊர் போய் சேர முடியாது.

8. ஆற்றலும் பெருமையும் உடையவன் ஆணையிடுவதில் தவறில்லை. நிறை மொழி மாந்தரின் பெருமையை அவர்தம் வாய் மொழியாம் வேதங்களே உணர்த்தும். மந்திரங்கள் மாந்தர்களால் தரப்பட்டவை அல்ல. மாண்புடையோர்களால் அருளப்பட்டவை.

9. நற்பண்புகளால் உயர்ந்தோரின் வாய்ச் சொற்கள் பயனளிக்கக் கூடியவை. அத்தகையோர் சினங் கொள்ளுமாறு நாம் செயல்களைத் தூண்டினால் அதன் பயன் நம்மால் தாங்க முடியாத ஒன்றாகி விடும். சினம் கொள்வதை விடக் கொடியது சினத்தைத் தூண்டுதல்.

10. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பும், கருணையும் உடைய அறவோரே அந்தணர். அவரே இவ்வுலகத்தாரால் பாராட்டப் படுபவர். உயிர்க்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே துறவு. அதனை உடையாரே மேலோர்.

தொடரும் .......