Monday, November 26, 2007

படைத்தோன் மன்றப் பண்பிலாளனே !! .... புறம்

ஏற்றத்தாழ்வு மிக்க உலகம் எதனால் உண்டாகியது? உழைத்து உயர வேண்டும் என்ற உன்னத நோக்கம் இல்லாத மனிதர்களால் தான் உண்டாகியது. இயற்கையின் படைப்பில் வாழ்க்கை வளமுடையதாகத் தான் உலகு படைக்கப் பட்டது. பண்பாடில்லாத மக்கள் தம் மனம் பக்குவப்படாமையால் உலகைப் படுத்தி பகுத்து விட்டனர்.


வறுமையால் வாடுவதை எவரும் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கைக்கு அறம் பொருள் இன்பம் என்று இலக்கணம் வகுத்த வள்ளுவனும் வறுமையைச் சாடுகிறான். நெருப்பில் கூட ஒருவன் தூங்கி விட முடியும் ஆனால் வறுமையில் வாழ முடியாது ; அது கொடுமை என்று கூறுகின்றான்.


நேரிய வழியில் பொருளீட்டி, ஈட்டியவற்றைப் பகுத்து, நல்வழி வாழ வழி காட்டுகின்றான். ஒருவன் கையேந்தி பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டால் அதற்காக அவனைச் சாடவில்லை. புலவன் அப்படிப் படைத்த படைப்பாளன் பரந்து கெடுக என்கின்றான். தெய்வ நூலில் தெய்வத்தை தேவனாய் வழி பட்ட புலவன், வறுமை உலகைப் படைத்தோனையே பண்பிலாளன் எனச் சாடுகின்றான்.


நினைவும், சொல்லும், செயலும் நேரிய வழியில் செயல் பட்டால் வறுமை இவ்வுலகை விட்டுப் பறந்து செல்லும். பாருலகம் பண்பட்டு வளமான வாழ்க்கைப் பாடம் படிக்கும்.