Monday, May 5, 2008

குருவிக்கூடு

எண்ணப் பறவைகள்
எப்போதும் சிறகடிக்கும்
சிந்தனைகள் சிக்கித்
தவித்தாலும் சிதறல்கள்
தாவித்தான் செல்லும் !

சிறிசுகளைப் பெருசாக்க
பட்டிருக்கும் பாடெல்லாம்
படமாய் ஓடுகிறது
பாடமாய்த் தெரிகிறது
மனத் திரையில் !

கையில் பெட்டி
கால்கள் எப்போதும்
ரயிலடியில் ! காலம்
சக்கரமாய்ச் சுழன்றது
கேரளக் கரையில் !

பதிவஞ்சல் இடங்களே
புறப்படும் நேரமும்
வருகை காலமும்
மனத்தில் நடமாடக்
காலம் ஓடும் !

ஓயாத உழைப்பும்
ஒன்று சேராத
செலவும் நீராய்
சேர்ந்தோடும் நினைவு
அலைபாயும் ! நீண்ட
வெளியில் நிழலாடும் !

ஒன்றா இரண்டா
எதிர்பார்க்கும் உள்ளங்கள்
சிறுவனுக்குக் கால்சட்டை
சிறிது வளர்ந்தவனுக்கு
பள்ளிக் கட்டணம்
பாதியில் பள்ளியை
பறக்கவிட்ட பையனுக்கு
பதிவான இருப்பிடம் !

இளைய வயதில்
எதிர்காலக் கனவில்
கல்லூரிப் படிப்பை
பாத்திகட்டிய பையனுக்கு
படியேற்ற முயற்சி !

படிப்பை முடித்து
பதிவெழுத்தைப் பயின்று
பணிபார்க்கும் தம்பிக்கு
பணியக முதலீடு !

பத்துப்பேர் தவிக்கும்
பாசக் குடும்பத்தின்
பசியாற வழி !

இத்தனைக்கும் இடையில்
இருப்பதற்கு ஒர்வீடு
செங்கலாய் சிமிண்டாய்
மணலாய் மரமாய்
கம்பியாய் கருங்கல்லாய்
காசுகள் சில்லறையில் !

ஒன்றொன்றாய்
முகம்பார்க்கும்
தாயும்சேயும் !
அத்தனையும்
கையில் மறைத்து
காலங் கலங்க
கடைத்தேறி
நிமிர்கையில்
வாழவும் ஆசை !
வாழ்க்கைத் துணையின்
ஓசை ! வளரும்
பிஞ்சுகளின் பார்வை !

காலம் பறந்தது
உழைத்த கரங்களில்
உறுதி மட்டுமே
உழைப்பின் பரிசு !
இன்னும் ஒடுகிறது
கால்கள் ! இன்பத்தை
ஒருபுறம் ஒதுக்கி
ஓரமாய் வைத்து
ஒருபுன்னகை !

புதியபாதையில்
மறுபடியும் ஒரு
குருவிக்கூடு !

செல்வி ஷங்கர்
---------------------















1 comments:

')) said...

படியுங்கள் - கருத்தினைப் பதியுங்கள்