Sunday, May 25, 2008

10 : இனியவை கூறல்

01 : இன்சொல் என்பது அன்புடையதாய் குற்றம் நீங்கியதாய் உள்ள அருள் மனம் படைத்தாரின் வாய்ச் சொற்களே ஆகும். அன்புடைய மொழி அருள் மொழி ஆகும்.

02 : உள்ளம் உவந்து ஒரு பொருளைக் கொடுப்பதைக் கட்டிலும் சிறந்தது முகமலர்ந்து இன்சொல் பேசுதல். அதுவே இன்பம் பயக்கும்.

03 : முகமலர்ந்து நோக்கி மனமகிழ்ந்து இன்சொல் பேசுதலே அறம். சொல்லுக்கு மலர்ச்சி முகத்தில் வேண்டும்.

04 : எல்லாரிடத்தும் இன்சொல் பேசுபவர்க்கு துன்பத்தைத் தரும் வறுமை இல்லாது போகும். வறுமை கூட இனிக்கும் இன்சொல்லில்.

05 : பணிவுடையவனாயும் இன்சொல் பேசுபவனாகவும் இருப்பதே ஒருவனுக்கு அழகு. பிற அணிகலன்கள் எல்லாம் பண்பிற்கும் இன்சொல்லிற்கும் பின்னெ தான். புன்னகை பூக்கும் புதுமையான அணிகலன் இன்சொல்.

06 : நல்லவற்றை விரும்பி இன்சொற்களைக் கூறுபவனுக்கு தீமைகள் மறைந்து நன்மைகள் பெருகும். தீமை போக்கும் புது வழி இன்சொல் பேசும் நல்வழியே !

07 :பிறர்க்கு நன்மைப் பயனைத்தந்து நற்பண்பிலிருந்து தவறாத இன்சொற்கள் நமக்கு நல்வாழ்வையும் நல்வழியையும் காட்டும்.

08 : துன்பம் நீங்கிய இன்சொல் ஒருவனுக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல மறு பிறப்பிலும் இன்பத்தைத் தரும். வேதனையால் வேர்த்துவிடும் இதயம் இன்சொல்லால் குளிர்ந்து விடும். அப்போது இப்பிறப்பென்ன எப்பிறப்பும் இன்பமே !

09 : பிறர் பேசும் இன்சொற்கள் தமக்கு இன்பம் தருவதை உணர்கின்ற ஒருவன் எதற்காகத் துன்பத்தைத் தருகின்ற வன்சொற்களைப் பேச வேண்டும். புரியாத புதிர் தானே இது. இன்சொல் பேசுவதால் நா வடுப்படுவதில்லையே !

10 : இயற்கையில் இன்சொற்கள் கொட்டிக் கிடக்கின்ற போது அதை விடுத்து வேதனை தரும் கடுஞ்சொற்களை ஏன் கூற வேண்டும் ? கனியும் கனிகளை விடுத்து கசக்கும் காய்களைத் தேடி உண்பது அறியாமையன்றோ ! இன்சொல் பேசுக !! வன்சொல் பேசற்க !!

செல்வி ஷங்கர்
--------------------

5 comments:

')) said...

இன்சொல் பேசலாமே பதிவர்களே !!

')) said...

//துன்பம் நீங்கிய இன்சொல் ஒருவனுக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல மறு பிறப்பிலும் இன்பத்தைத் தரும்.//
நல்லது!

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் ..... செல்வி ஷங்கர்
-------------------------------------------------

')) said...

செல்வி அம்மா,

சீனா ஸாரின் 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' பதிவு உங்கள் வள்ளுவத்தின் பாதிப்புத் தானான்னு கொஞ்சம் கேட்டு, சொல்லுங்க.

தங்கள் வள்ளுவம் - 'சுருக்', 'நறுக்', 'நச்'. :) :))))

')) said...

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலின் பாதிப்பு தான் வள்ளுவம்
வள்ளுவத்தின் பாதிப்பு தான் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

புது வண்டே - விளங்குகிறதா ?

கோழியிலிருந்து முட்டையா
முட்டையிலிருந்து கோழியா

அன்புடன் .... சீனா
--------------------