Saturday, March 8, 2008

அறத்துப்பால் - இல்லறவியல் - 5. இல்வாழ்க்கை

1. இல்வாழ்க்கை வாழ்பவன்தான் அறவழியில் செல்பவரையும் வழி நடத்துகிறான். தான் வாழும் இல்லற ஒழுக்கத்தால் துறவியரையும் பிறரையும் ஆதரித்து அவர் நல்வழிச் செல்ல துணை புரிகிறான்.

2. துறவியர், வறியவர், ஆதரவின்றித் தம்மிடம் வந்து இறந்தோர் ஆகிய மூவர்க்கும் இல்லறத்தானே துணையாகிறான்.

3. தான் வாழும் முயற்சியால் ஈட்டிய பொருளை, தன் முன்னோர், இறைவன், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவர்க்கும் பங்கிட்டு உதவி வாழ்பவனே சிறந்த இல்லறத்தான் ஆவான்.

4. பழி பாவங்களுக்கு அஞ்சி அறவழியில் பொருளீட்டி பகுத்துண்டு வாழ்க்கை நடத்துபவனுக்கு எப்போதும் துன்பமில்லை. கொடுத்தால் இன்பம் தானே ! கொடுப்பதைத் தடுப்பது மிகவும் கொடுமை.

5. இல்வாழ்க்கையின் பண்பு அனைவரிடமும் அன்பு காட்டுதல். அவ்வாழ்க்கையின் பயன் இல்லாதார்க்குக் கொடுத்துதவும் அறச்செயல். அன்பும் அறனுமே பண்பிற் சிறந்த நெறி.

6. அன்பும் பண்பும் உடைய இல்வாழ்வில் அறமுறைப்படி வாழ்தலைக் காட்டிலும் சிறந்த பயன் பிற வாழ்க்கை முறையில் இல்லை. அவ்வழியில் போய் பெறத்தக்கதுவும் எதுவுமில்லை. துறத்தலை விட இல்லறமே இனிது.

7. தன்னை வருத்தி, தவம் செய்து மேன்மை அடைவாரை விட உயர்ந்தவன் ஒழுக்க நெறி பிறழாமல் இல்லறம் நடத்துபவனே! வாழ்க்கை ஒழுக்கம் வளங்களை எல்லாம் அள்ளித் தரும்.

8. தாமும் நல்வழியில் நின்று பிறரையும் அவ்வழியில் செலுத்தும் இல்வாழ்வான் தானமும் தவமும் செய்வாரை விட மேலானவன். வாழ்க்கையில் நல்வழியைப் பின் பற்றும் முயற்சியே முனிவரின் தவத்தினும் மேலானது.

9. அறம் என்று சொல்லப்படுவதே இல்லறம் தான். அதுவும் பிறரால் பழிக்கப்படாதிருக்குமே யானால் மேன்மையிலும் மேலானது. மனத்தால் துறப்பதே துறவு.

10. இல்லாதார்க்குக் கொடுத்தும், இல்லறத்தாரிடம் அன்பு காட்டியும், ஏதுமற்றாரை ஆதரித்தும் இவ்வுலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தால் அவன் வானுறையும் தெய்வத்துள் ஒருவனாகவே மதிக்கப் படுவான். வாழ்க்கை நெறி தெய்வ நெறியாகும்.

தொடரும் ......

2 comments:

')) said...

சோதனை மறுமொழி

')) said...

அருமையான விளக்கங்கள்,சுருங்கச்சொல்லி தெளிவா விளங்க வைச்சிருக்கிங்க அக்கா:)...
வாழ்த்துக்கள். தொடருங்க:)