Sunday, March 2, 2008

4 : அறன் வலியுறுத்தல்

1. வாழும் உயிர்க்கு அறத்தை விடச் சிறந்த செல்வம் எதுவுமில்லை. இவ்வுலகில் மேன்மையையும், செல்வச்செழிப்பையும் தருவது நல்லறச் செயல்களே!

2. அறத்தைப் பின்பற்றுவதால் மனிதனுக்கு நன்மையே விளையும். அதை மறப்பதால் அழிவே நேரிடும். மறந்தும் கூட உயிர்க்குத் தீங்கு செய்தல் கூடாது.

3. அறச்செயல்களை நாம் நம்மால் முடிந்த வழிகளில் எல்லாம், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இடை விடாமல் செய்ய வேண்டும். மனதால், சொல்லால், செயலால் செய்வதே அறம்.

4. மனத்தின் கண் குற்றம் இல்லாமல் செயல்களைச் செய்வதே அறம். மற்றவை எல்லாம் ஆரவாரச் செயல்களே ! உள்ளொன்று வைத்து புறமொன்று செய்தல் அறமாகாது.

5. பிறர் ஆக்கம் கண்ட இடத்துப் பொறாமையும், அவர் பொருள் வளர்ச்சியின் மீது ஆசையும், அது கைகூடாத போது கொள்ளும் சினமும், அச்சினத்தால் விளையும் தீய சொற்களும் நீக்கிச் செய்வது தான் அறம். குற்றங்களைத் தவிர்த்து மற்றதைச் செய்தலே நற்றவம்.

6. அறத்தை இப்போது வேண்டாம் பின் எப்போதாவது செய்து கொள்வோம் என்று எண்ணுதல் கூடாது. நம் இளமைக் காலத்தேயே நல்லறச் செயல்களைத் தொடங்கி விட வேண்டும். அவ்வாறு செய்தால் அச்செயல் நம் வாழ்நாளின் வழித் தடைகளை எல்லாம் நீக்கி விடும்.

7. அறத்தின் பயன் இத்தகையது தான் என்பதை நமக்கு யாரும் சுட்டிக் காட்ட வேண்டாம். பல்லக்கைச் சுமப்பவனும், அதில் அமர்ந்து செல்பவனும் எத்தகையவன் என்பதை நாம் பார்த்து அறிதல் போல் அறப்பயனை நாம் செய்து உணர்தல் வேண்டும்.

8. ஒருவன் தன் வாழ்நாளில் அறம் செய்யாது வீணாகக் கழித்த நாள்களே இல்லை எனும் அளவுக்கு நன்மைச் செயலைச் செய்து விடல் வேண்டும். அது அவன் துன்பங்களை எல்லாம் துடைத்து விடும்.

9. அறச் செயல்களைச் செய்வதால் வரும் இன்பமே ஒருவனுக்குச் சிறப்பாகும். அறவழி அல்லாது பிற வழிகளால் பெறப்படும் சிறப்புகள் அவனுக்குப் புகழைத் தாரா.

10. எனவே எப்படிப் பார்த்தாலும் சரி ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியவை எல்லாம் நல்லறங்களே ! தவிர்க்க வேண்டியவை எல்லாம் பொய்யறங்களே ! நன்மையைச் செய், தீமையைச் செய்யாதே என்பது வேத வாக்கல்லவா !!

பாயிர இயல் முற்றிற்று.
( அதிகாரம் 1 முதல் 4 வரை)
-------------------------------------
இல்லறவியல் தொடரும் ....