Saturday, September 4, 2010
29 : கள்ளாமை
கள்ளாமை காக்கதன் நெஞ்சு ....................................01
பிறர்தன்னை இகழாது வாழ வேண்டும் என்று எண்ணுபவன் மற்றவர் பொருளை வஞ்சித்துக் கொள்ளும் மனம் இல்லாதவனாய் இருக்க வேண்டும். வஞ்சனை என்றும் இழிவையே தரும்.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் .......................................02
அடுத்தவன் பொருளை அவன் அறியாமல் கவர்ந்து கொள்வோம் என மனத்தால் நினைத்தாலும் அது தீதே. நினைவு செயலுக்கு இடமாகும்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவறிந்(து)
ஆவது போலக் கெடும் ...............................................03
திருடிப் பெறுகின்ற செல்வம், பெருகுவது போல் தோன்றி, இருப்பதையும் அழித்துச் சென்று விடும். அழிவிற்கு வழி கோலுதல் ஆக்கமன்று.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் ....................................................04
திருடிப் பொருள் பெற விரும்பும் பேராசை முடிவில் தீர்க்க முடியாத பெரும் துன்பத்தைத் தந்து விடும். துயரம் தரும் களவை விரும்பவே கூடாது.
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதி
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் ...............................05
பிறன் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் வஞ்ச மனத்தாரிடம் அன்பும் அருளும் நிறைந்த செயலைக் காண முடியாது. வஞ்சிப்பாரிடம் வளமான மனமேது ?
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர் ......................................................06
மாற்றான் பொருளைத் திருடி வாழும் ஆசை மனமுடையாரிடம் நல்வழியில் செல்லும்
நல்ல மனத்தைக் காண முடியாது.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல் .........................................07
வாழும் முறை அறிந்து வாழ்பவனிடத்தே பிறன்பொருளை வஞ்சித்து வாழும் இருள் மனம் நிற்காது. இருளும் ஒளியும் ஒரு நேரத்தே தோன்றாது. ஒன்றிருப்பின் மற்றொன்று நிலைக்காது.
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு .....................................08
வாழும் முறையறிந்து வாழ்பவன் நெஞ்சத்தே அறம் நிலைப்பதைப் போல் களவறிந்தவன் நெஞ்சில் வஞ்சம் குடியிருக்கும்.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர் ...............................................09
களவைத் தவிர பிறவற்றைத் தேர்ந்து அறியாதவர்கள் அறமில்லா செயல்களைச் செய்து அழிவர். புகழின்றி வாழ்வர்.
கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு ...........................................10
திருடிப் பிழைப்பவர்க்கு வாழ்வின் பயன் நிலைக்காது. நல்வழி நடப்பார்க்கு வானுலகம் கிடைக்காமல் போகாது.
செல்வி ஷங்கர்
Wednesday, June 23, 2010
28 :கூடாவொழுக்கம்
ஐந்தும் அகத்தே நகும்................................................... 01
வஞ்சகத் தன்மை உடையவனின் பொய்யான தவ ஒழுக்கம் இவ்வுலகத்தாரின் நகைப்புக்கு இடமாகும். உள்ளம் அறிய உண்மை வெளிப்படும் செயற்பாடே தவம். தலை சிறந்த ஒழுக்கம் !
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின்..................................................... 02
தன் நெஞ்சம் அறிய குற்றம் புரிந்தவனின் வானுயர்ந்த புகழாலும் பெருமையாலும் எவ்விதப் பயனுமில்லை !
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.........................03
மனவலிமை இல்லாதவனின் தவக்கோலம், பசு புலியின் தோல் போர்த்திக் கொண்டு பயிர் மேய்ந்த கதையாகும். ஏமாற்றுதல் என்பது வேதனைக்குரியதே !
தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.......................................04
தவக்கோலம் பூண்டு தவறானவற்றைச் செய்தல் வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிக்க வலை வீசுதல் போலாகும். வேட்டையாடுதல் வேள்வியாகாது.
பற்றற்றே மென்பார் படிற்றொழுக்கம் எற்றற்றென்றன்
ஏதம் பலவும் தரும்..........................................................05
ஆசைகளைத் துறந்தோம் என்று கூறிப் பொய்யான தவ ஒழுக்கம் மேற்கொள்வார் செயல் நாம் என்ன செய்தோம் என்று எண்ணி எண்ணி இரங்கும் படியான நிலையைத் தந்து விடும். மனக் கலக்கம் மாண்புறு செயலுக்கு வித்தாகாது.
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணவர் இல்.......................................06
உள்ளத்தால் துறவாது துறவி போல் கோலம் கொண்டு ஏமாற்றி வாழ்பவரை விடக் கொடியவர் இவ்வுலகில் யாருமிலர். பொய்யும் போலித் தோற்றமும் ஒழுக்கம் ஆகாது.
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து...............................................07
வெளித் தோற்றத்தில் குன்றி மணி போல் தோற்றம் உடையாரும் மனத்தை மறைத்துச் செயல்படுதல் மூக்கில் கரியுடைய தோற்றத்துடன் செயல்படுவது போல ஆகும்.
மனத்த(து) மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.....................................08
மனத்தில் குற்றத்தை மறைத்து மாண்புடையார் போல் செயல்படுவார் செயல், நீரில் மூழ்கி தன்னை மறைத்து, தன் செயல்களைச் செய்வது போல் ஆகும்.
கணைகொடி(து) யாழ்க்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல் .........................................09
தோற்றத்தில் அன்றிச் செயலாலும் மாறுபடும் மாந்தரும் உலகில் உள்ளனர். அம்பு தோற்றத்தால் நேரானது. ஆனால் செயலால் துன்பம் தரும். யாழ் வளைவானது. ஆனால் இன்னிசை தரும்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின்...............................................10
இந்த உலகம் பழிக்கத் தக்க செயல்களை நாமும் ஒழித்து விட்டால் புறத்தோற்றங்கள் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. முடியை வளர்த்தலும் மொட்டை யடித்தலும் எதற்கு ?
செல்வி ஷங்கர்
Monday, October 5, 2009
27 :தவம்
அற்றே தவத்திற் குரு ...........................................01
தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதுமே தவம் எனப்படும்.
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது .................................02
நல்லவராக இருப்பதும் நல்லொழுக்கம் மேற்கொள்வதும் தவமுடையார்க்கு அழகாகும். அஃதில்லாதவர் அவ்வாறு நடிப்பது தவறே ஆகும்.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்........................................03
தவம் செய்வார்க்கு தானம் செய்ய வேண்டியே மற்றவர்கள் தவம் மேற்கொள்வதில்லை.
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் ..............................04
துன்பம் செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் அன்பு செய்தாரைப் போற்றுதலும் தவத்தால் வரும் பண்பு
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.........................................05
நினைத்ததை நினைத்தவாறு பெறவே தவச் செயல் எல்லோராலும் மேற்கொள்ளப் படுகிறது. இடை விடா முயற்சியே தவம்
தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு ....................06
தவம் மேற்கொள்பவர்களே தம் கடமையைச் செய்பவர்கள். மற்றவர்களெல்லாம் ஆசையால் பயனற்ற செயல்களைச் செய்பவர்களே ஆவர்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு...........................07
பொன்னைச் சுடச்சுட தரம் உயர்ந்து ஒளி வீசுவது போல் தவமேற்கொள்வார்
தன் துன்பம் நீங்கி அறிவொளி வீசுவர்.
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மண்ணுயிர் எல்லாம் தொழும்.....................08
தன்னலப் பற்றற்றவனை தன்னுயிரும் பிறர்க்கே என்று எண்ணு பவனை எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு......................09
தவம் மேம்பட்ட ஒழுக்கம் உடையாரை எமனும்நெருங்க முடியாது. தன்னுயிரும் பிறர்க்கே என்ற விடாமுயற்சி உடையானிடம் உயிர் கொல்லும் எமனுக்கு ஒரு வேலையும் இல்லை.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்..............................10
உலகில் வறியவர் பலராக இருப்பதற்குக் காரணம் தவ உணர்வுடையார் சிலராகவும் அவ்வுணர்வற்றார் பலராகவும் இருப்பதுவே . விடா முயற்சிஉடைய செயல்களே வெற்றியைத் தேடித் தரும்.
செல்வி ஷங்கர்
Saturday, May 16, 2009
26 : புலால் மறுத்தல்
எங்ஙனம் ஆளும் அருள். -----------------------------01
தன்னுடல் வளர்ப்பதற்கு பிற உயிர்களைக் கொன்று உண்பவன் இடத்தில் அன்பும் அருளும் எப்படி இருக்க முடியும் ? ஒரு நாளும் அருள் பிறக்க வழி இல்லை. உயிர்க்கொலை கொடிது.
பொருளாட்சி போற்றாதர்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.----------------------02
பொருளைப் போற்றிப் பாதுகாக்கும் திறன் அதன் பயன் அறியார்க்கு இல்லை. ஊன் தின்பவனுக்கு உயிரைக் காக்கும் அருட்தன்மை இல்லை.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.---------------------------03
படைக்கருவி கொண்டவன் நெஞ்சம் உயிர்க்கொலை ஒன்றையே நோக்கி அன்பினை மறத்தல் போல், உடல்சுவை ஒன்றையே கருதி ஊனுண்பவன் அருளை மறக்கின்றான்.
அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.-----------------------04
அன்புடமை என்பது உயிர்க்கொலை செய்யாதிருத்தல். உயிர்களைக் கொல்லுதல் அருளுடைமை அன்று. அதுவும் அவ்வூனை உண்பது நற்செயல் அன்று.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. ----------------------05
ஊனுண்ணாதிருப்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன். அந்நிலை மறந்து ஊனுண்பவனை நரகம் கூட விழுங்காது. நரகத்திலும் கொடியது ஊனுண்ணுதல்.
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.-------------06
தின்பதற்காக உயிர்க்கொலை செய்பவன் இல்லை என்றால் விற்பதற்காக உயிர்க்கொலை செய்வாரும் இல்லை. உண்பவன் இருப்பதால் தான் விற்பவனும் கொல்கின்றான்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.---------------------------07
பிறிதொரு உயிரின் உடற்புண் என்றுணர்ந்து புலால் உண்பதைத் தவிர்த்தல் வேண்டும்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.-----------------------------08
தெளிந்த அறிவுடையார் உயிரை இழந்த உடலின் ஊனை உண்ண ஒருநாளும் விரும்பார். அறிவுடைமை என்பது உயிர்க்கொலை செய்யாமை.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று..------------------------09
அவிப்பொருள் அளித்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விடச் சிறந்தது ஒரு உயிரை அழித்து அதன் உடல் உண்ணாதிருத்தல்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.---------------------------------10
உயிர்க்கொலை செய்யாதவனை, ஊனுணவை உண்ணாதவனை உலகத்து உயிர்கள் எல்லாம் நெஞ்சாரப் போற்றி வணங்கும்.
செல்வி ஷங்கர்
-----------------------
Sunday, May 3, 2009
25 : அருளுடைமை
பூரியார் கண்ணும் உள ! ...................................... 01
செல்வத்துள் சிறந்த செல்வம் அருட்செல்வம். மற்ற பொருட்செல்வம் எல்லாம் இழிவானவர்களிடம் கூட இருக்கலாம்.
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை ! ................................... 02
எப்படிப்பார்த்தலும் சரி - அருளே வாழ்வுக்குத் துணையாகும். எனவே நல்ல வழிகளை நாடி அருட்செயல் புரிதல் வேண்டும்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் ! ...................................... 03
நெஞ்சம் கனியும் அருளுடையார்க்கு துன்பம் நிறைந்த இருள் உலகம் எப்போதுமில்லை.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ! ...............................04
பிற உயிர்களை அன்போடு காத்து அருள் செய்வார்க்கு தன்னுயிர் அஞ்சும் படியான துயர் எப்போதும் இல்லை.
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி ! .....................................05
அன்போடும் அறிவோடும் வாழ்வார்க்குத் துன்பமில்லை என்பதற்கு இந்த வளமான பூமியே சான்றாகும். காற்றும் மழையும் இயற்கை வளமும் நாம் கேட்டு வருவதில்லையே !
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார் ! ..........................06
அன்பின்றி அருள் மறந்து அல்லவை செய்பவர்கள் வாழ்வின் பயனிழந்தவர்கள் ஆவர்.
அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு! ............................ 07
பொருளில்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல் அருளில்லார்க்கு வாழ்வில் புக்ழ் இன்பம் இல்லாது போகும்.
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது ! ...................................08
செல்வ வளம் இல்லாதவர் ஒரு காலத்து வளம் பெற்று வாழலாம். ஆனால் அருளில்லாதவர் ஒரு நாளும் நலம் பெற்று வாழ இயலாது.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் . ................................09
அன்பும் அறிவும் இல்லாதவன் நல்வாழ்வு வாழ்தல் என்பது அறிவுத் தெளிவற்றவன் மெய்ப்பொருள் ஆய்தல் போன்றது.
வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. .........................10
நாம் நம்மை விட மெலியாரிடம் செல்லும் போது நாம் நம்மில் வலியார் முன் சென்றால் என்ன ஆவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இரக்கம் என்பது நெஞ்சில் வேண்டும்.
செல்விஷங்கர்
Friday, February 27, 2009
24 : புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு...................................... 01
இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தலும் அதன் மூலம் புகழ் பெறும்படியாக வாழ்தலுமே வாழ்க்கைப் பயன். அதைத்தவிர வேறு எதுவும் துணையன்று. ==================================================
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்...................................... 02
இவ்வுலகில் புகழ்ந்து பேசப்படும் பெருமை எல்லாம், வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுபவனின் புகழேயாகும். ==================================================
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்...................................... 03
நிலையற்ற இவ்வுலகில், அழியாது நிலைத்து நிற்பது புகழொன்றேயாகும். ==================================================
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு...................................... 04
இவ்வுலகில் நிலைத்த புகழ்ச்செயல் செய்தாரையே, மேலுலகம் போற்றும். தேவர்களை அன்று! தெய்வத்தின் மேலானது 'வறியவர்க்கு, ஒன்று ஈந்து' பெறும் புகழே.
==================================================
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது...................................... 05
வளர்ச்சியும் அழிவும் உலகத்து இயல்பு. அதில் புகழ்பட வாழும் வித்தை, ஈந்து வாழும் இன்பம் உடையவர்க்கே கைவரப் பெறும்.
==================================================
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...................................... 06
ஒரு செயலைச்செய்து புகழ்பெற முடியும் என்றால், அச்செயலால், நாம் இச்சமுதாயத்திற்கு அறிமுகமாக வேண்டும். இல்லையெனில் அச்செயலைச் செய்யாமல் இருப்பதே நன்று.
==================================================
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்...................................... 07
புகழ்பெறும் படும்படியான செயல்களைச் செய்து வாழ இயலாதவர்கள், தம் இயலாமைக்காகத் தன்னைத்தானே நொந்து கொள்ள வேண்டுமே தவிர, தன்னை இகழ்வாரை நோவதினால் ஒரு பயனும் இல்லை. ==================================================
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்...................................... 08
தனக்குப்பின், புகழ் எஞ்சி நிற்குமாறு வாழ அறியாதவர் வாழ்க்கை, பலரும் பழிக்கும் படியான வாழ்வாகிவிடும். ==================================================
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்...................................... 09
புகழ்பெறாத மக்களைச் சுமந்த நிலம், குற்றமற்ற நல்வளங்கள் எல்லாம் இழந்து நிற்கும் - மாசுற்ற மக்களால், மாசற்ற மண்ணும் கெடும்.
==================================================
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்...................................... 10
பழிநீங்குமாறு வாழ்பவர்களே, உண்மையில் உயிர் வாழ்பவர்கள். புகழ் நீங்குமாறு வாழ்பவர்கள் உயிருடன் நடமாடினாலும் உயிரற்றவர்களே!==================================================
செல்வி ஷங்கர்
==================================================
Sunday, January 4, 2009
23 : ஈகை
குறியெதிர்ப்பை நீர துடைத்து...................................... 01
இல்லாதார்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதே ஈகை. அவ்வாறின்றிக் கொடுப்பதெல்லாம் ஒரு பயனை எதிர் பார்த்துச் செய்வதே ஆகும்.
==================================================
நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.......................................... 02
நல்வழி என்றாலும் பிறரிடமிருந்து ஒன்றைக் கொள்வது தீமையே ஆகும். மேலுலகம் இல்லை என்றாலும் பிறருக்கு ஒன்றைக் கொடுத்து உதவுவதே நன்மையாகும்.
==================================================
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள .................................... 03
இரப்பார்க்கு இல்லை என்று சொல்லாமல் ஒரு பொருளைக் கொடுத்தல் உயர்குடிப் பிறந்தாரின் பண்பாகும்.
==================================================
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு............................................. 04
உதவி கேட்பவன் பெற்று மகிழும் இன்முகத்தைக் காணாது அவனுக்கு இல்லை என்று மொழிவது கையேந்திப் பிச்சை எடுப்பதை விடக் கொடியது.
==================================================
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்........................................... 05
தன்பசியை அடக்கிக் கொள்வது சிறந்த ஆற்றல் தான். ஆனாலும் பிறரின் பசித்துன்பத்தைப் போக்க உணவிட்டு உதவுபவனின் ஆற்றல் அதனை விட உயர்ந்தது.
==================================================
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி....................................... 06
இல்லாதவனின் பசித் துன்பத்தைப் போக்குவது தான் பொருள் பெற்ற ஒருவன் தன் பொருட்செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கும் முறையாகும்.
==================================================
பாத்தூண் மறீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது................................................. 07
இருப்பதைப் பகுத்துப் பிறருக்குக் கொடுத்து உண்பவனை பசியென்னும் கொடிய துன்பம் சேர்வதில்லை.
==================================================
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கண வர்......................................... 08
பொருளைச் சேர்த்து வைத்துப் பிறருக்குக் கொடுத்து மகிழாதவர்கள் இருந்தும் இல்லாதவர்களே !
==================================================
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்..................................................... 09
இல்லாமையால் தவிப்பதை விடக் கொடுமையானது தானே தனித்திருந்து உண்பதாகும். கொடுப்பது மகிழ்ச்சி; மறைப்பது துன்பம்.
=======================================================
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.................................................. 10
இறப்பை விடக் கொடியது இவ்வுலகில் வேறொன்றுமில்லை. ஆனால் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்க முடியாத போது, ஈயாமல் இருப்பதை விட, இறப்பதே மேலாகும். மேலும் அக்கொடிய இறப்பும் கூட இனிதாவதுண்டு.
==================================================
செல்வி ஷங்கர்
==================================================
Saturday, December 27, 2008
22 : ஒப்புரவறிதல்
என்னாற்றுங் கொல்லொ உலகு. 01
பயன்கருதாது பொழியும் மழை போன்றதுதான் அனைவரிடமும் அன்பைப் பொழிந்து செய்யும் உதவியும் ! மழைக்கு இவ்வுலகத்தார் எவ்வித உதவியும் செய்வதில்லை ! ஆனாலும் அது இவ்வுலகை காத்துக் கொண்டுதான் இருக்கிறது !
------------------------------------------------------------------------------------------
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 02
பாடுபட்டுத் தன்முயற்சியால் சேர்த்த செல்வங்கள் எல்லாம் தகுதி உடைய பிறர்க்கு உதவுதற்கே !
------------------------------------------------------------------------------------------
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 03
தேவருலகத்தும் பெறமுடியாதது ! வேறு எவ்வுலகத்தும் காணமுடியாதது !நாம் இவ்வுலகத்தே பிறருக்கு உதவி வாழும் அன்பின் சிறப்பு !
------------------------------------------------------------------------------------------
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 04
பிறர்க்கு உதவி செய்து வாழ்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன் ! அவ்வாறு இல்லாதவன் வாழ்க்கை உயிரற்ற வாழ்வே ஆகும் !
------------------------------------------------------------------------------------------
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 05
பிறர்க்கு உதவுபவனின் செல்வம் ஊரின் நடுவே உள்ள குளம் நீர் நிறைதலைப் போன்றது !
------------------------------------------------------------------------------------------
பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். 06
உதவும் மனப்பான்மை உடையவனின் பெருஞ்செல்வம் பயன் தரும் மரம் ஊரின் நடுவே பழுத்ததைப் போன்றது !
------------------------------------------------------------------------------------------
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 07
ஒருவர்க்கு ஒருவர் உதவி வாழும் பெருந்தன்மை உடையவனின் செல்வம் மருந்து மரம் போன்றது. நோயகற்றும் மருந்து போல் பிறர் துன்பம் போக்கும் செல்வம் !
------------------------------------------------------------------------------------------
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். 08
வறுமை வந்துற்ற போதும் உதவி செய்யத் தயங்காதவர்கள் ஒப்புரவாளர்கள். உலகியல்பை அறிந்து உதவி வாழும் வாழ்வை மேற்கொண்டவன் வறுமையைக் கண்டு அஞ்ச மாட்டான்.
------------------------------------------------------------------------------------------
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு. 09
அடுத்தவர்க்கு உதவும் அன்பு மனங்கொண்டவன் தன் வறுமையை நினைத்துக் கலங்க மாட்டான். பொருளின்மையால் பிறர்க்கு உதவமுடிய வில்லையே என்ற நிலையை நினைத்துத் தான் மனம் வருந்துவான் !
------------------------------------------------------------------------------------------
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து . 10
ஒப்புரவு செய்வதால் கேடு வரும் என்றால் அக்கேட்டை ஒருவன் தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அது தன்னிலும் உயர்ந்ததாகும். உதவுதால் ஒரு போதும் கேடு வராது.
------------------------------------------------------------------------------------------
Saturday, November 1, 2008
21 : தீவினையச்சம்
தீவினை என்னும் செருக்கு. ( 201)
தீச்செயல்களைச் செய்ய தீயோர் அஞ்ச மாட்டர். ஆனால் மேலோரோ அஞ்சி நடுங்குவர்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். ( 202)
தீய செயல்களால் வரும் துன்பங்கள் மிகப் பெரிது. ஆதலால் அவை தீயைக் காட்டிலும் கொடியதாய் எண்ணப்படும். தீ தொட்டால் தான் சுடும். தீச் செயல்களோ நினைத்தாலே தீங்கு வரும்.
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். (203)
பகைவர்க்கும் தீங்கு நினையாதிருத்தலே அறிவினுள் எல்லாம் தலை சிறந்த அறிவாகும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)
மறந்தும் கூடப் பிறர்க்குத் தீங்கு நினையாதே ! நினைத்தால் உனக்கே அத்துன்பங்கள் வந்து சேரும்.
இலனன்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
ஏதும் அற்றவன் என்ற இல்லாமையால் கூட நீ தீச்செயல்களைச் செய்யாதே ! செய்தால் இன்னும் நீ வறுமைத் துன்பத்தால் வாட நேரிடும்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தவன். ( 206)
துன்பங்கள் தன்னைத் தொடரவேண்டாம் என்று எண்ணுபவன் பிறர்க்குத் துன்பம் தரும் தீச்செயல்களைச் செய்யாது இருத்தல் வேண்டும்.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். ( 207)
எத்தகைய கொடிய பகை பெற்றாரும் அதிலிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால் பிறருக்குத் தீங்கு செய்தவர் அத்தீங்கிலிருந்து தப்பி வாழ்தல் அரிது.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று. (208)
நம் நிழல் நம்மை விட்டுப் பிரியாது நம் காலடியிலேயே உறைவது போல் தீங்கு செய்தார் கெடுதல் என்பது நிச்சயம்.
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தோண்றும்
துன்னற்க தீவினைப் பால். (209)
தன் நல்வாழ்வினை விரும்பக் கூடிய ஒருவன் எவ்வகையிலும் பிறர்க்குத் தீவினை செய்ய நினைத்தல் கூடாது. தீமை என்றும் நன்மையைத் தராது.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். (210)
தீவழிச் சென்று தீச்செயல் செய்யாதவன் என்றால் அவன் நல்லவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
செல்வி ஷங்கர்
Tuesday, September 30, 2008
20 : பயனில சொல்லாமை
எல்லாரும் எள்ளப் படும்
பலரும் வெறுக்கும் படியான பயனற்ற சொற்களைப் பேசித்திரிபவன் எல்லாராலும் இகழப் படுவான்.
02 : பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது
பலர் முன்னிலையிலும் பயனற்ற சொற்களைச் சொல்லித் திரிபவன் அன்பற்ற சொற்களை நண்பர்களின் முன் சொல்லித் திரிதலை விடத் துன்பம் அடைவான்.
03 : நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை
ஒருவன் பயனற்றவன் என்பதை அவன் பேசும் வீணான சொற்களே காட்டி விடும். சொல் பயனுடையதாய் நயனுடையதாய் இருத்தல் வேண்டும்.
04 : நயண்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து
பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பேசித் திரிபவனை அவன் சொற்களே அவனை நல்வழியில் இருந்து நீக்கிவிடும். நுணலும் தன் வாயால் கெடுவது இயற்கையே !
05 : சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நேர்மை உடையார் சொலின்.
நற்பண்புடையார் பயனற்ற வெற்றுச் சொற்களைக் கூறினால் அவர்தம் புகழும் பெருமையும் போய் விடும்.
06 : பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்
பயனற்ற சொற்களைப் பேசித் திரிபவனை மனிதன் என்று சொல்வதை விட மக்களுள் பிறந்த பதர் என்று சொல்லுதல் வேண்டும்.
07 : நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
நல்ல சொற்களைச் சொல்லா விட்டாலும் பரவாயில்லை. சான்றோர் பயன் தராத இழிசொற்களைச் சொல்லாதிருத்தல் நன்று
08: அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இலாத சொல்
அறிதற்கரிய ஆற்றல் மிக்கார் ஒருநாளும் பெரும்பயன் தராத வீண்சொற்களைச் சொல்ல மாட்டர்.
09 : பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
அறிவு மயக்கம் நீங்கிய நல்லறிவு உடையார் மறந்தும் கூட பயனற்ற சொற்களைக் கூறார். மறதி மனிதனின் விரோதி - எவ்விடத்தாயினும் சரி !
10 : சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
சொல்லில் பயனுடைய சொற்களைச் சொல்ல வேண்டும். பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தல் வேண்டும்.
செல்வி ஷங்கர் - 30092008
Monday, August 4, 2008
19 : புறங்கூறாமை
புறங்கூறான் என்றல் இனிது
ஒருவன் நற்செயலைச் செய்யாமல் தீய வழியில் நடப்பவனே ஆனாலும் பிறரைப் பற்றிப் புறங்கூறாமலிருத்தல் அவனுக்கு மேன்மையைத் தரும்.
02 : அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை
அறத்தை அழித்து அறமல்லாத பாவச் செயலைச் செய்வதை விடக் கொடுமையானது காணும் போது சிரித்துப் பேசி காணாத போது பழித்துப் பேசுதல்
03 : புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்
புறங்கூறிப் பொய்யாக உயிர் வாழ்தலை விட இறத்தல் ஒருவனுக்கு அற நூல்கள் கூறும் நல்வழிப்பயனை எல்லாம் தரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழ்தல் வாழ்வே ஆகாது.
04 : கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
நேருக்கு நேர் நின்று மனம் புண்படும்படி பேசினாலும் பேசலாம். ஆனால் அவன் இல்லாத இடத்து அவனைப் பற்றி மாறான சொற்களைப் பேசாதே !
05 : அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும்
நல்வழிச் செல்லும் அன்பு உள்ளம் இல்லாதவன் என்பது அவன் கூறும் புறஞ்சொல்லின் புன்மையால் தெரிந்து விடும். ( புன்மை = இழிவு)
06 : பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்
பிறரைப் பழி கூறுபவன் தானும் அத்தகைய பழிச் சொல்லுக்கு ஆளாவான். இழித்தும் பழித்தும் பேசுபவன் பாராட்டப் படுதல் இல்லை.
07 : பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
சிரித்துப் பேசி நட்புக் கொள்ளத் தெரியாதவர்கள் நட்புக் கூடப் பிரியும் படியான கொடுஞ்சொற்களைப் பேசிப் பிரித்து விடுவர்.
08 : துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னெகொல் ஏதிலார் மாட்டு ?
தம்மோடு நெருங்கிப் பழகுபவரையே தூற்றிப்பேசும் இயல்புடையார் முன்பின் அறியாதாரை என்ன பாடு படுத்துவர் ? இழித்தும் பழித்தும் பேசுதல் எவர்க்கும் ஏற்றதன்று. பேச்சில் கூட அன்பு பாராட்டத் தெரியாதவர்கள் செயலில் என்செய்வர் !
09 : அறன்நோக்கி ஆற்றுக்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை
கண்டொன்று சொல்லி காணாதொன்று பேசுபவனையும் அறம் கூறும் இவ்வுலகம் தாங்கிக் கொள்கிறது. பொறுத்தல் தன்னியல்பு என்பதால் இவ்விழிந்தவனையும் உலகு தாங்குகிறது
10 : ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
பிறர் குற்றங்களைக் கண்டு உணர்வது போல் நம் குற்றங்களையும் நாம் கண்டால் இவ்வுலகில் நமக்குத் துன்பம் என்பதே இல்லை. தன்னைப்போல் பிறரையும் எண்ண வேண்டும். அடுத்தவனிடமும் அன்பு காட்ட வேண்டும்.
செல்வி ஷங்கர் - 04082008
Sunday, July 27, 2008
18 : வெஃகாமை
குற்றமும் ஆங்கே தரும்
நடுநிலைமை இன்றி பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டால், நம் குடிச்சிறப்பும் அழிந்து நம்க்குக் குற்றங்கள் குறையாக வந்து சேரும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுதல் அழிவையே தரும்.
02 : படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
நடுவு நிலைமை தவறி நடக்க நாணுபவர்கள், பிறன் பொருளை ஆசையால் பறித்துக் கொள்ளும் பழிபடு செயலைச் செய்ய மாட்டர். செய்யத்தகாதன செய்ய நாண வேண்டும்.
03 : சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
நிலைத்த இன்பத்தை விரும்பும் நற்பண்பாளர், சிற்றின்பம் கருதி பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கும் அறனில்லாச் செயலை ஒரு போதும் செய்ய மாட்டர்.
04 : இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் நல்லோர் வறுமையால் பிறர் பொருளைக் கவர நினைக்க மாட்டார்கள்.
05 : அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
அடுத்தவன் பொருளை அடைய விரும்பும் அறிவற்ற செயலைச் செய்யும் நுண்ணறிவாளரின் அறிவால் ஒரு பயனும் இல்லை ! அறிவின் பயனே நன்மை தீமை பகுத்துணர்வது !
06 : அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
நல்லறத்தை விரும்பி இல்லறம் நடத்துபவன் பொருளாசை கொண்டு பிறன் பொருளைக் கவர நினைத்தால் அவன் பெருமை கெட்டு விடும். பேராசைப் படுவதே பெருமையைக் குலைக்கும்.
07 : வேண்டற்க வெஃகியான் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.
பிறன் பொருளைக் கவர்ந்து அதனால் வரும் வளர்ச்சியை நாம் ஒருபோதும் விரும்பக் கூடாது. விரும்பினால், கவர்ந்த செல்வம் ஒரு போதும் நற்பயன் தராது. நல்வழிக்கு நற்செல்வமே உதவும்.
08 : அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
நம் செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமெனில் நாம் பிறர் கைப்பொருளைக் கவர ஆசைப் படுதல் கூடாது.
09 : அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.
அறன் அறிந்து அடுத்தவன் செல்வத்திற்கு ஆசைப்படாதவனைத் தேடி, திருமகள் தானே தான் சேருமிடம் இதுவென அறிந்து சேர்வாள்.
10 : இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
அடுத்தவன் பொருளை அடைய ஆசைப்படுவது, அழிவைத் தரும் என்பதை உணர்ந்து, பிறன் பொருளை விரும்பா பெருமையே வாழ்வில் வெற்றியைத் தரும்.
செல்வி ஷங்கர் - 27082008
Saturday, July 19, 2008
17 : அழுக்காறாமை
அழுக்காறு இலாத இயல்பு - 01
ஒருவன் தன் மனத்தின்கண் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும். நினைவு சொல்லாகும். சொல் செயலாகும். செயல் நம் இயல்பை வெளிப்படுத்தும். எனவே அழுக்காறாமை உள்ளத்தின் கண் வேண்டும்.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் - 02
எவரிடத்தும் பொறாமை இல்லாத பண்பினை ஒருவன் கொள்வானே யானால் அதை விட அவனுக்குப் பெருமை தரும் சிறப்புகள் வேறு எதுவும் இருக்க முடியாது.
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான் - 03
இப்பிறப்பில் செல்வமும் மறு பிறப்பில் அறமும் வேண்டாமென்பவனே பிறரது செல்வ வளர்ச்சிக்கு உதவாது பொறாமைப் படுபவன்.
பொறாமைக்குணம் செல்வத்தையும் சிறப்பையும் கெடுக்கும். செல்வமும் சிறப்புமின்றி மனிதன் எப்படி வாழ்வது ? அதற்கு பொறாமையை விட்டு விட்டு வாழலாமே !
அழுக்காற்றின் அல்லவை செய்யர் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து - 04
தீநெறியால் ஏற்படும் குற்றத்தை உணர்ந்த அறிவுடையார் பொறாமை கொண்டு அறனழிக்க வல்ல தீயவற்றை ஒரு போதும் செய்யார்.
அழுக்காறு உடையார்க்(கு) அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது - 05
அழுக்காறு உடையவர்களுக்கு வேறு பகைவர்களே வேண்டாம். அப் பொறாமைப் பண்பு ஒன்றே அவருக்கு அழிவைத் தந்து விடும்.
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் - 06
பிறருக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுபவனின் சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவுமின்றிக் கெடும். இவன் பாவம், இவன் சுற்றத்தையே அழிக்கும் என்றால், இவனும் சிறப்பழிவான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !
அவ்வித்(து) அழ்க்கா(று) உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் - 07
பிறர் ஆக்கம் கண்ட இடத்துப் பொறாமைப் படுபவனைக் கண்டு பொறுக்காத செல்வத் திருமகள் தான் சேராது தம் தமக்கைக்குக் காட்டி விடுவாள். துன்பத்திற்கு வழிகாட்டிச் செல்பவள் திருமகளின் தமக்கை.
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் - 08
பொறாமை என்ற பாவி அதனை உடையானின் செல்வத்தை அழித்து அவனையும் தீய வழியில் செலுத்தி விடும்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் - 09
பொறாமை உடையவனின் செல்வச் செழிப்பும் நற்பண்புடையவனின் வறுமை வாழ்வும் இவ்வுலகில் நினைத்துப் பார்க்கப் படும். காரணம் பிறவிப் பயனாக இருக்கலாம்.
அழுக்கற்(று) அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - 10
பொறாமை உடையவன் புகழ் பெறுதலுமில்லை. அஃதில்லாதவன் அழிந்து விடுவதுமில்லை.
செல்வி ஷங்கர் - 19072008
Wednesday, July 16, 2008
16 : பொறையுடைமை
இகழ்வார் பொறுத்தல் தலை
தன்னைத் தோண்டுபவனையும் விழாமல் தாங்கி நிற்கும் நிலம் போல் நாம் நம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
02 : பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின் நன்று
நாம் பிறர் செய்த தீங்கினைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். முடிந்தால் அதனை மறந்து விடுதல் அதனினும் நன்று.
03 : இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை
வறுமையில் மிகப் பெரிய வறுமை நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை நாம் வரவேற்காமல் இருப்பதே. அதைப் போல் வலிமையில் மிகப் பெரிய வலிமை, அறியாமல் நம்மை இகழ்ந்து பேசுபவரை நாம் பொறுத்துக் கொள்வதே !
04 : நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்
நற் பண்புகள் நம்மை விட்டு நீங்காமல் இருக்க வேண்டுமானால் நாம் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வதே உயர் பண்பு.
05 : ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
ஒருவர் செய்த தீங்கைப் பொறுக்காது தண்டித்தவரை இந்த உலகம் ஒரு பொருட்டாகக் கருதாது. ஆனால் அச்செயலைப் பொறுத்துக் கொண்டவரை பொன்னைப் போற்றிப் புகழ்வது போல் போற்றி மகிழும்.
06 : ஒறுத்தார்க்(கு) ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்
தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பம். ஆனால் அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு இந்த உலகம் உள்ளவரை புகழ்.
07 : திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று
தகாத செயலை நமக்குப் பிறர் செய்யினும் அதற்காக நாம் மனம் வருந்தி அவர்க்கு நன்மை தராத செயலைச் செய்யாதிருத்தல் நன்று. தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
08 : மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்
மிகுந்த சீற்றம் கொண்டு கொடிய தீச்செயலை நமக்குச் செய்தவரை நாம் நம்முடைய பொறுமை என்னும் தகுதியால் வென்று விடல் வேண்டும்.
09 : துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்பவர்கள் ஆசைகளைத் துறந்த துறவியரைக் காட்டிலும் மேலானவர்கள் ஆவர்.
10 : உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
உண்ணா நோன்பினை மேற்கொள்ளும் பெரியவர்களும் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களின் பின் வைத்தே எண்ணப் படுவர். பொறுமை என்பது துறவினும் மேலானது.
செல்வி ஷங்கர் - 16072008
Sunday, July 13, 2008
இரண்டில் ஒன்று
சக்கரங்கள் இரண்டு ஊர்வதற்கு
கண்கள் இரண்டு பார்ப்பதற்கு
காதுகள் இரண்டு கேட்பதற்கு
கைகள் இரண்டு செய்வதற்கு
கால்கள் இரண்டு நடப்பதற்கு
ஆனால் உள்ளம் ஒன்று தான்
உணர்வதற்கும் உணர்த்துதற்கும்
15 : பிறன் இல் விழையாமை
அறம்பொருள் கண்டார்க்கண் இல்
மாற்றான் மனைவியைத் தனதாக்கிக் கொள்ள விரும்பும் அறியாமை இவ்வுலகில் அறம் பொருள் கண்ட ஆன்றோரிடத்து இல்லை.
02 : அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
நல்லவற்றை எல்லாம் மறந்து, தீயவற்றைச் செய்யும் தீயவரினும் தீயவர் மாற்றான் மனைவியை விரும்பி அவர் வீட்டின் முன் நிற்கும் பேதையரே !
03 : விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்
நன்கு அறிந்தாரின் மனைவியை விரும்பி தீமை புரிபவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்தாரே ! மானம் உயிர். மானமிழந்து வாழ்தல் உயிர் துறந்து வாழும் உணர்வற்ற வாழ்வே !
04 : எனைத்துணையர் ஆயினும் எண்ணாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல் ?
சிறிதும் நினைத்துப் பார்க்காமல் மாற்றான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு புகழும் பெருமையும் உடையவனாய் இருந்தாலும் அவற்றால் ஒரு பயனுமில்லை. புகழும் பெருமையும் ஒழுக்கத்தால் வருவது. ஒழுக்கம் தவறுதல் உயிரை விடுதலுக்குச் சமமாகும்.
05 : எளிதென இல்இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
எளிதென எண்ணி பிறன் மனைவியை அடைய நினைப்பவன் காலத்தால் அழியாத பெரும் பழியை அடைவான்.
06 : பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்
நெறி கடந்து மாற்றான் மனைவியை அடைய நினைப்பவன் இடத்தே பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கும் நீங்காது நிற்கும்.
07 : அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான்
பெண்மை நயவா தவன்
அற வழியில் சென்று இல்லறம் நடத்துபவன் என்பவன் பிறருக்கு உரிமை உடைய பெண்மையை ஒரு நாளும் விரும்பான்
08 : பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு
மாற்றான் மனைவியை மனத்தாலும் நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமும் ஆகும். ஒழுக்கமே அறம்.
09 : நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தே அனைத்து நலன்களும் கை வரப் பெற்றவர்கள் யாரென்றால் பிறன் ஒருவனுக்கு உரிமை உடையவளின் தோள் சேராதவரே ! நலன் ஒழுக்கத்தால் பெறப்படுவது.
10 : அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று
அறங்களைச் செய்யாது பாவங்களைச் செய்பவனாக இருந்தாலும், அவன் பிறன் மனைவியை விரும்பாதிருத்தலே அவனுக்கு நன்மை தரும்.
செல்வி ஷங்கர் - 13072008
Sunday, July 6, 2008
14 : ஒழுக்கமுடைமை
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம் ஒருவனுக்கு உயர் சிறப்பைத் தருவதால் அது உயிரைக் காட்டிலும் மேலானதாகும். உயிர் சிறந்ததாயினும் ஒழுக்கம் அதை விட உயர்ந்தது. உயிரை விட்டு விட எண்ணலாம்.ஆனால் ஒழுக்கத்தைத் தவறியும் விடுதல் கூடாது. வாழும் மனிதனுக்கு உயிர் ஒழுக்கம்.
02 : பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணிக் காக்க வேண்டும். எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கத்தை விட உயிருக்குத் துணையானதும் மேலானதும் வேறொன்றுமில்லை.
03 : ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
ஒழுக்கமே ஒருவருக்குக் குடிச்சிறப்பாகும். அவ்வொழுக்கம் தவறுதல் மிகவும் இழிந்த பிறப்பாய் விடும். உயர் குடியில் பிறந்தாலும் ஒழுக்கம் தவறினால் அது இழிவாய் நிற்கும்.
04 : மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
வேதத்தைக் கற்றவன் அதை மறந்தாலும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் பிறப்பொழுக்கம் தவறினால் அவன் சிறப்பே கெட்டு விடும். கற்றது மறக்காது; தவறினால் ஒழுக்கம் மீண்டும் பெற முடியாது.
05 : அழுக்கா(று) உடையான்கண் ஆக்கம்போன்(று) இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு
பொறாமை உடையவன் இடத்தே வளரும் செல்வம் இல்லை. அது போல் ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்வில்லை.
06 : ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்(கு) அறிந்து.
நெஞ்சுரம் மிக்கொர் ஒரு போதும் ஒழுக்கம் தவறார். காரணம் ஒழுக்கம் தவறுதலினால் வரும் குற்றத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் மேலோங்கி நிற்பதனால். ஒழுக்கமே அவர்க்கு மனவலிமை.
07 : ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
ஒழுக்கத்தால் மேலான புகழைப் பெறுவர். ஒழுக்கம் தவறுதலால் தீராத பழியை அடைவர். பழி, பாவத்தை விடக் கொடியது. செய்யக்கூடாத செயலைச் செய்வதால் பெறுவது பாவம்; செய்யாத செயலுக்கு ஆளாவது பழி.
08 : நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
நன்மைக்கு வழி காட்டுவது நல்லொழுக்கம். தீராத துன்பத்தைத் தருவது தீயொழுக்கம்.
09 : ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
ஒழுக்கமுடையவர்கள் மறந்தும் கூட நாத்தவறி தீய சொற்களைக் கூற மாட்டர்; எண்ணவும் மாட்டர்; செய்யவும் மாட்டர்.
10 : உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
உலக நடைமுறை ஒழுக்கத்தைக் கல்லாதவர்கள் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் அறிவற்றவராகவே கருதப்படுவர். நன்மையைச் செய்வதும்;தீமையை மறப்பதும், உண்மையைச் சொல்வதும்; பொய்ம்மையைத் தவிர்ப்பதும், ஆக்கத்தை நினைப்பதும்; அழிவை மறப்பதும் உலக நடையாகும்.
செல்வி ஷங்கர் : 06.07.2008
Thursday, June 26, 2008
13 : அடக்கமுடைமை :
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் ஒருவன் நல்வாழ்விற்கு வழிகாட்டி அவனை தேவரிடத்து அழைத்துச் செல்லும். அடங்காமை தீவழிச் செலுத்தி அவ்னை நரகத்தில் தள்ளிவிடும்.
02 : காக்கப் பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு
அடக்கமே இவ்வுயிர்க்குச் சிறந்த செல்வம். அதை விடப்பெரிய செல்வம் வேறில்லை. அதனால் நாம் காக்க வேண்டிய பொருள்களுள் அடக்கத்தை ஒன்றாகக் கொண்டு காக்க வேண்டும். உயிரையும் உடலையும் விட்டு விடுவோமா எளிதில் ? அது போல் அடக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
03 : செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
அறியவேண்டியவற்றை அறிந்து அடங்கி நடந்தால் அவ்வடக்கமே அவனுக்குப் புகழைத் தரும்.
04 : நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
இல்வாழ்க்கை நெறியில் சென்று அடக்கத்தை மேற்கொள்பவன் பெருமை மலையைக் காட்டிலும் பெரியது. மனிதன் மலை போல் தோற்றம் பெறுதல் மலைப்பான் செயலல்லவா !
05 : எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பணிவுடைமை என்பது எல்லார்க்கும் நன்மையைத் தரும். அதிலும் செல்வர்கள் பணிந்து நடந்தால் அது அவர்கள் மேலும் ஒரு செல்வத்தைப் பெற்ற சிறப்பைத் தரும். அடக்கமே பெருஞ்செல்வம்.
06 : ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
ஆமை தன்னைத் துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள தன் ஓட்டினுள் ஐந்து உறுப்புகளையும் அடக்கிக் கொள்வது போல் ஒருவன் ஒரு பிறப்பில் தன் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டால் அவ்வடக்கம் அவனுக்கு ஏழு பிறப்பிலும் துணை நிற்கும். ஒன்று எழானால் உயர்வல்லவா ! உவப்பல்லவா !
07 : யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
எவற்றைக் காக்காவிட்டாலும் சரி ஒருவன் தன்னுடைய நாவை மட்டுமாவது அடக்கி ஆள வேண்டும். இல்லையெனில் அவன் சொல் குற்றத்தால் துன்பப்படுவான். கல்லால் அடித்த அடியை விட வலியுடையது சொல்லால் அடித்த அடி !
08 : ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
நாவடக்கமின்றி தீச்சொற்களைப் பேசித் திரிபவனிடம் எந்த நன்மையும் பயன் தராது. ஒரு தீமை பல நன்மைகளை பயனற்று விடச் செய்யும். ஒன்று பலவற்றை அழிக்குமென்றால் அந்த ஒன்றை நாம் அடக்க வேண்டாமா ?
09 : தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
ஒருவனைத் தீயினால் சுட்ட புண் மருந்திட்டால் ஆறிவிடும். ஆனால் தீய சொற்களால் மனம் புண்படும் படி பேசிய சொற்கள் ஏற்படுத்தும் மனக்காயம் மருந்திட்டாலும் ஆறாது. வடுவை ஏறபடுத்தி விடும். புண்ணே கொடிது ! வடு அதனினும் கொடியது !
10 : கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
மனத்தே பொங்கி எழும் சினத்தை அடக்கி, கற்று அடங்கியவன் இருக்குமிடத்தைத் தேடி, அறக்கடவுள் தானே செல்வான். கற்றலின் பயன் அடங்கலே ! அதை அறிந்தவன் சினத்தை அடக்கி சொற்களை ஆளுதல் எளிது. அப்படிப்பட்ட சொற்களைக் கேட்க அறமே வழி கேட்டுச் செல்லும். அறம் நம் முன்னே வருமென்றால் நாம் அதை வரவேற்க வேண்டாமா ! அடக்கத்துடன்!
செல்விஷங்கர் - 26082008
Tuesday, June 17, 2008
சிவாசி மற்றும் சிலேபி பற்றி ......
சிவாசி வாயிலே சிலேபியாம் - இது தொடராம் - மூவர் மூவராக அழைக்க வேண்டுமாம். விதி முறைகள் கடுமையாக இருக்கின்றன.
அக்காலகட்டத்தில் ஒரு அஞ்சலட்டை வரும்( இக்காலத்திலும் தான்) - அதை 10 பேருக்கு அனுப்பினால் கோடீஸ்வரனாகலாம் - இல்லையெனில் தலை சுக்கு நூறாய்ச் சிதறும் என்று. நாங்களும் அனுப்பி அனுப்பி கோடீஸ்வரர்கள் ஆனோம்.
நிற்க ( எல்லோரும் எழுந்து நிக்காதீங்க)
எப்படித்தான் எல்லாரும் சிலேபி சுத்தறாங்களோ தெரியல - நானும் சிக்கலில்லாம ஒரு சிலேபியாச்சும் சுத்திடலாமுன்னு பாக்கறேன். அது எப்படி அடுக்கடுக்கா ! அழகழகா ! நூல் கட்டி கண்ணாடித் தடுப்புக்குள்ள - அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு !
என்ன சொன்னாலும் இந்த "ஜி" யைப் பாருங்க - எத்தன வளைவு - எத்தன நெளிவு - அந்தக் கொம்புலே - அத விடுங்க.
அந்த "லே" - அதுக்கு ஒரு தனிக்கதையே இருக்குங்க - ஆமா - ஒரு குட்டிப்பையன் வந்தான் - தமிழ் படிக்க ! மிஸ் மிஸ் நான் நவீன் - எனக்கு தமிழ் டிக்டேசனே வர மாட்டெங்குதுன்னான். "லே" போடுன்னா அவன் கேட்டான் - மிஸ் லாங்கா ஷர்ர்ட்டா ? இல்லல்ல - ஜஸ்ட் லைக் ஃபோன். எப்படி இருக்கு "லே" போட்ட கதெ. ( குறிப்பு : அவன் கேட்டது குறிலா நெடிலான்னு - ஃபோன் அப்படின்னா லாங்குன்னு பதில்)
ஒரு வேளை சிவாசி சிலேபி சாப்பிட்டாரா சாப்பிடலயான்னு யாருக்குத் தெரியும் ? எல்லாரும் சேர்ந்து அவர் வாயிலே சிலெபியைத் திணிச்சிட்டாங்க. எப்படியோ அவரும் சிலேபிய சகிச்சிக்கிட்டாரு. ஏன்னா பஜ்ஜி சொஜ்ஜி போல இல்லாம ஜூஸியா இருக்கறதாலெ ! அப்படியே வாயிலே போட்டாரு - நழுவிடுச்சி !
வீர சிவாசி பத்தி உங்களுக்கெல்லாம் தெரியுமா ? எனக்குத் தெரியுமே !!
ஏன்னா எங்க வீட்டுக் கண்ணுக் குட்டி நர்சரிலே படிச்சப்போ, "இ" போடுடா கண்ணான்னா, வேக வேகமா வந்து நாலு கோடு போடும் - "E" . இது இல்லடா கண்ணா - அ ஆ இ போடுடான்னா, சரிசரின்னு தல ஆட்டிட்டு சுத்தோ சுத்துன்னு வட்டவட்டமா சுத்தும். நிறுத்தவே நிறுத்தாது. ஏய்! ஜிலேபியா சுத்தறே நீன்னு தொடையிலே ஒரு படார். அதுக்கப்புறம் "இ"க்கண்ணா எழுதறப்ப அப்பா பக்கமே போகாது. எப்படி எங்க வீட்டு "இ".
இந்தக் கண்ணுக்குட்டி, "இ" போட்டது தான் எனக்கு இங்கே சிலேபி சுத்த உதவிச்சு. ஆமா ! அந்தக் கண்ணுக்குட்டி அதுக்கப்புறம் பாருங்க ! குட்டியா இருந்துக்கிட்டே ஒரு அஞ்சு நிமிடம் அழகான தமிழ்லே வீர சிவாசி வசனம் பேசுச்சு பாருங்க ! ஆடீட்டோரியமே அசந்து போச்சு ! எப்படி சிவாசி !
17.06.2008 - செல்விஷங்கர்
Sunday, June 15, 2008
கருத்துகள் மகிழும் கோப்புகள்
சிரிக்கின்றன! சிரிக்கும்
நேரம் சிந்தனைப்
பூக்கள் தெரிக்கின்றன!
தட்டித் தட்டிக்
கொடுத்து! எட்டி
எட்டிப் பார்த்த
எண்ணங்கள் நெஞ்சில்!
கட்டிக் கொடுத்த
சோறும்! கற்றுக்
கொடுத்த சொல்லும்
காலத்தில் சிறக்க!
குட்டிக் குருவிகள்
குலவும் குடும்பம்!
குழந்தைகள் கொஞ்சும்
கோகுலம்! ஆம்!
சிந்தை மணக்க
சிரித்து மகிழும்
சிறிசுகள் இங்கே!
உள்ளம் ஏங்கும்
உறவுகள் சிலிர்க்கும்!
காலம் கடந்த
பின்னும் கண்ணுள்
தோன்றும் காட்சிகள்
இங்கே! கருத்துகள்
மகிழும் கோப்புகள்!
செல்வி ஷங்கர்
